புது தில்லி: தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சந்தேகம் இருப்பதாக திமுக செய்த முறையீடு மீது உச்ச நீதிமன்றம் இன்று இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.
கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறும், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மறுவரையை முடித்து 3 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.