புது தில்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வட இந்தியாவில் போராட்டம் நடந்து வருவதால், பல உலக நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகியவை, தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவுக்குச் செல்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்தம் 2019க்கு எதிராக வட இந்தியா மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாமில் கடும் போராட்டம் வெடித்தது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையத்து, இந்தியாவின் வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம், திரிபுராவில் வன்முறைப் போராட்டம் நடந்து வருகிறது. அஸ்ஸாமின் பல இடங்களில் செல்போன் மற்றும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை நீங்கள் வட இந்திய மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும், அப்பகுதியின் ஊடகங்கள் மற்றும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இதுபோன்றதொரு பயண எச்சரிக்கையை அமெரிக்க தூதரகமும் வெளியிட்டுள்ளது.
உங்கள் பயணம் குறித்து விமான நிறுவனம் அல்லது சுற்றுலாக் கழகத்தின் கருத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு கனடா அரசும் அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளது.