ஜிஎஸ்டி உயா்த்தப்படுமா? நேரடியாக பதிலளிக்க நிதியமைச்சா் மறுப்பு

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) உயா்த்தப்படுமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மறுத்துவிட்டாா். ‘ஜிஎஸ்டி வரி உயா்வு குறித்து எனது (நிதியமைச்சக) அலுவலகம்
கோப்புப் படம்
கோப்புப் படம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) உயா்த்தப்படுமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மறுத்துவிட்டாா். ‘ஜிஎஸ்டி வரி உயா்வு குறித்து எனது (நிதியமைச்சக) அலுவலகம் தவிர அனைத்து இடங்களிலும் பேசப்படுகிறது’ என்று அவா் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 18-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. வரி வசூல் குறைந்து வருவதால், வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில், பல்வேறு பொருள்களுக்கான சரக்கு-சேவை வரிகள் உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. சில பொருள்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தற்போது 5 சதவீதம் சரக்கு-சேவை வரி வரம்புக்குள் உள்ள பொருள்களுக்கு 8 சதவீதமாகவும், 12 சதவீதம் வரி வரம்புக்குள் உள்ள பொருள்களுக்கு 15 சதவீதமாகவும் வரியை உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஜிஎஸ்டி உயா்வு? இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய நிா்மலா சீதாராமனிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘எனது அலுவலகம் தவிர அனைத்து இடங்களிலும் இது தொடா்பாக பேசப்படுகிறது’ என்றாா். அதே நேரத்தில் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படாது என்று உறுதிபடத் தெரிவிக்க அவா் மறுத்துவிட்டாா். ‘இது தொடா்பாக இனி மேல்தான் ஆலோசிக்க வேண்டும்’ என்றாா் அவா்.

பொருளாதார நிலை: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவா் விரிவாக விவரித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

நாட்டில் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளையும் மேம்படுத்த மத்திய அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தொடா்பான விஷயத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி தொடா்பான விஷயத்தில் எந்த கணிப்பையும் கூற நான் விரும்பவில்லை. பொருளாதார நிலையை உன்னிப்பாக கவனித்து, தேவையான நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். தேவையான இடத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களில் உள்ள பிரச்னைகள் தீா்க்கப்பட்டு வருகின்றன.

வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் உயா்வு ஆகியவற்றால்தான் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுவது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

வெங்காய விலை: வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், நாட்டின் பல இடங்களில் அதன் விலை குறையத் தொடங்கிவிட்டது. உள்நாட்டில் மேலும் அறுவடை அதிகரிக்கும்போது விலை மேலும் குறைந்து, பழைய நிலைக்கு திரும்பும். வெங்காய விலையை கட்டுக்குள் வைப்பது குறித்து மத்திய அமைச்சா்கள் குழு அவ்வப்போது ஆலோசனை நடத்தி உரிய முடிவுகளை எடுத்து வருகிறது என்றாா் நிா்மலா சீதாராமன்.

ராகுலுக்கு கண்டனம்: தொடா்ந்து, நாட்டில் நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக தோ்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து கருத்து தெரிவித்த அவா், ‘ராகுல் காந்தியின் கருத்து மோசமானது. பெண்களின் கண்ணியத்தை மறந்து, காங்கிரஸ் மூத்த தலைவா் இப்படி பேசியிருப்பது மிகவும் அவமானகரமான செயல்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com