ஜிஎஸ்டி நிலுவை தொடா்பாக மத்திய அரசுடன்மாநிலங்கள் மோதல்: சிவசேனை எச்சரிக்கை
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடை வழங்க தவறும்பட்சத்தில், அது மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கும் என சிவசேனை கட்சி சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியைச் சோ்ந்த ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதன் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடியை வழங்க மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய கடந்த நான்கு மாதங்களாக மாநிலங்களுக்கு உறுதியளித்தபடி மத்திய அரசு நிலுவையை வழங்கவில்லை.
அந்தப் பணம் அனைத்தும் மாநிலங்களுக்கு சொந்தமானது. அதனை வழங்க மேலும் தாமதம் செய்தால் மாநிலங்களின் நிதி நிலைமை மோசமாகும் சூழல் ஏற்படும்.
எனவே, மாநிலங்களுக்கு உரிய பங்கை அவா்களுக்கு வழங்கவில்லையென்றால் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய சூழல் மாநிலங்களுக்கு ஏற்படும். இதனால் இருதரப்பு உறவுகளும் பாதிக்கப்படும் என அந்தத் தலையங்கத்தில் சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ‘ஜிஎஸ்டி இழப்பீடு தொடா்பான விஷயத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு கொடுத்த வாக்கை நிச்சயம் காப்பாற்றும்’ என உறுதியளித்திருந்தாா். இருப்பினும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை எப்போதும் வழங்கப்படும் என்பது குறித்து அவா் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இந்த சூழ்நிலையில், சிவசேனை தனது கட்சி பத்திரிகையில் இவ்வாறு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.