குடியரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சனிக்கிழமை தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது பலர் உயிரிழந்த நிலையில், அதனை திரும்பப்பெறக் கோரி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது,
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகியவற்றுக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து தற்போது எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. எனவே, மத்திய அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது முதல் பகுஜன் சமாஜ் கட்சி அதை எதிர்த்து வருகிறது. ஏனென்றால் இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. ஆனால், மற்ற கட்சிகளைப் போன்று போராட்டங்களின் பெயரால் வன்முறையை ஏற்படுத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தது மனு அளித்துள்ளனர். இந்த தவறான சட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்து எதிர்க்கும் என்று தெரிவித்தார்.