சபரிமலைக்குச் சென்ற 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், சபரிமலைக்குச் சென்ற 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்ட 19 பக்தர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளனர். இந்த 19 பேரில் 15 பேர் பம்பையில் உயிரிழந்துள்ளனர். மற்ற 4 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (61) கடைசியாக உயிரிழந்தார். கோயிலுக்கு அருகேவுள்ள அப்பச்சிமேட்டில் வைத்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 15 மருத்துவ முகாம்களில் மொத்தம் 30,157 நபர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அவசரப் பிரிவு சிகிச்சைகளின் எண்ணிக்கை 414 ஆகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.