சூரிய கிரகணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (டிச. 26) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒடிஸா மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நிகழவிருக்கிறது. இதனை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை காண்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாநில அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் தாஸ் அறிவித்தார்.
மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கிரகணத்தைக் காண பதானி சமந்தா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மக்கள் கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.