தில்லியில் தாமரை மலர்ந்தே தீரும்: அமித் ஷா
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்தியது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
"காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து குழப்பங்களை உண்டாக்கின. இவ்விவகாரத்தில் மக்களைத் தவறாக வழிநடத்தியதன் மூலம் தில்லியின் அமைதியான சூழலை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்தன. தில்லியில் கேஜரிவால் அரசுக்கான நேரம் முடிந்துவிட்டது. இங்கு தாமரை மலரும்.
நாட்டினுடைய தலைநகரின் வளர்ச்சிக்காக மொத்தமுள்ள 7 எம்.பி., பதவிகளையும் பாஜகவுக்கு வழங்கியுள்ளீர்கள். தற்போது பாஜகவுக்கு எம்எல்ஏ-க்களை வழங்கும் நேரம் வந்துவிட்டது. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டங்களை கேஜரிவால் செயல்படுத்தவில்லை. எங்களுடைய திட்டங்களில் தன்னுடையப் பெயரை போடுவதிலேயே அவருக்கு (கேஜரிவால்) விருப்பம்" என்றார்.
தில்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.