புது தில்லி: ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக 2 ஹெக்டேர் அளவு வரை நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். இந்த 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக விவசாயிகளின் வஙகிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றொரு அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது.
இந்நிலையில் ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது
அன்பு நமோ (நரேந்திர மோடி), ஐந்து ஆண்டுகளாக உங்கள் ஆட்சியின் திறமையின்மை மற்றும் ஆணவம் காரணமாக,நமது விவசாயிகளின் வாழ்க்கை அழிக்கப்பட்டு விட்டது.
தற்போது அவர்களுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் (6000 / 365) வழங்குவது என்பது இத்தனை நாளாக அவர்கள் எதற்காக செயல்பட்டார்களோ, உழைத்தார்களோ அதற்குச் செய்யப்படும் அவமானம்.
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.