புது தில்லி: சமூகத்தின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடையும் திட்டங்கள் உள்ள பட்ஜெட் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சமூகத்தின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடையும் திட்டங்கள் உள்ள பட்ஜெட் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:
சமர்பிக்கப்பட்டுள்ள இடைக்கால மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்குமானது. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயிகள், சிறுதொழில் செய்வோர் என அனைவரையும் பாதுகாக்கும் பட்ஜெட்டாகவும் இது அமைந்துள்ளது.
இந்த பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் நிறைய சலுகைகளை அனுபவிக்க உள்ளனர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
மாடு வளர்ப்பவர்கள், மீன் வளர்ப்போர் என பலதரப்பினருக்கும் சலுகைகளை பட்ஜெட் கொண்டுள்ளது.
தேர்தலுக்கு பின் நம் அரசு மேற்கொள்ளவுள்ள புதிய வளர்ச்சிப்பாதைக்கான முன்னோட்டமாகத்தான் இடைக்கால பட்ஜெட் உள்ளது.
முக்கியமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டமானது அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வருமான உதவித்திட்டம் 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும். இதுவரை அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான திட்டங்களின் மூலம் அதிகபட்சமாக 3 கோடி விவசாயிகளே பயன்பெற்றனர்.
சமூகத்தின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடையும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் சுய முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் திட்டங்களும் இதில் உள்ளன.
ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி யோஜனா திட்டங்களின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.