புதுதில்லி: 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.65,587 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று தாக்கல் செய்து வரும் இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் அறிவித்து வருகிறார் ரயில்வே துறை அமைச்சரும், இடைக்கால நிதி அமைச்சருமான பியூஷ் கோயல்.
பியூஷ் கோயல் தாக்கல் செய்துவரும் பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு சுமார் ரூ.65,587 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே லெவல் கிராஸிங் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கான முதலீடு அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புதுறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் நிதி ஒதுக்கப்படும் என பியூஸ் கோயல் தெரிவித்தார்.