போபால்: ஏர் இந்தியா விமானத்தில் விநியோகிக்கப்பட்ட காலை உணவான சாம்பார் இட்லி வடையில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணி அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ரோகித் ராஜ் சிங் சவுகான் என்பவர் பயணித்தார். அப்போது அவருக்கு காலை உணவாக சாம்பாருடன் கூடிய இட்லி வடை விநியோகிக்கப்பட்டுள்ளது. சாப்பிடுவதற்காக இட்லியில் சாம்பாரை ஊற்றியபோது அதில் கரப்பான்பூச்சி இறந்து கிடப்பதைக் கண்டு பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து மற்ற பயணிகளுக்கு விநியோகிப்பதற்கு முன்பாக உணவக ஊழியர்களிடம் புகார் செய்துள்ளார். அதை அவர்கள் காதுகொடுத்து கேட்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி சமூக ஊடகங்களின் அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்த சவுகான், இட்லி, வடைக்கு அடுத்ததாக இருந்த கரப்பான் பூச்சியை புகைப்படம் எடுத்து, பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இத்தகைய செயலுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றும், விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை என்று பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அதுபோன்ற எந்தவிதமான புகாரும் வரவில்லை என்று போபால் ஏர் இந்தியா மேலாளர் ராஜேந்திர மல்ஹோத்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.