சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரம் தொடர்பாக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பேசியுள்ளார்.
கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை கொல்கத்தா போலீஸார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு ஆலோசனை நடத்தி கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க தர்னாவில் ஈடுபடபோவதாக அறிவித்தார். அதன்பிறகு ராஜீவ் குமாருடன் இணைந்து அவர் தர்னாவை தொடங்கினார்.
இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ பிராந்திய அலுவலகம் முன்பு இருந்த போலீஸார் அங்கிருந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, சிபிஐ அலுவலகம் முன்பு சிஆர்பிஎஃப் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ இடைக்கால சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,
"கொல்கத்தா விவகாரம் தொடர்பாக எங்களது மூத்த சட்டத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறோம். அவர்கள் எந்தவிதமான ஆலோசனையை தந்தாலும் அது பின்பற்றப்படும். அவருக்கு (கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார்) ஆதாரங்கள் உள்ளன.
உச்சநீதிமன்றம் தெரிவித்ததன்படி, நாங்கள் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வருகிறோம். அதற்கு முன்னதாக, இந்த வழக்கை விசாரிக்க மேற்கு வங்க அரசு, தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்திருந்தது. அவர்கள் அதன் பொறுப்பை ஏற்று அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை எங்களிடம் கொடுத்து ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். பல்வேறு ஆதாரங்கள் அழிக்கப்பட்டும், காணாமலும் போய் உள்ளது. அந்த ஆதாரங்களை அழிப்பதற்கு அவர் உடந்தையாக இருக்கிறார்" என்றார்.