சஹடாய் பஜர்க் (பிகார்): பிகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பிகாரின் ஜோக்பனியிலிருந்து ஆனந்த் விகார் நோக்கிச் செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறு அதிகாலை 3.58 மணியளவில் சஹடாய் பஜர்க் பகுதியருகே தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இவற்றில் 3 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.
விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து வித உதவிகளையும் மேற்கொள்ளும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதேபோன்று படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், சிறிய அளவிலான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கான அனைத்து மருத்துவ செலவு தொகையையும் ரயில்வே நிர்வாகமே ஏற்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.