புதுதில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுப்பட்டது என்றும், இந்த தலையீட்டின் காரணமாக அதிருப்தியடைந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தங்கள் கருத்துக்களை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு அனுப்பிய கோப்பு ஒன்றில் குறிப்புகளாக எழுதியுள்ளதாக கூறி, அதற்கான ஆதாரங்களை பிரபல ஆங்கில நாளேடு ஒன்று வெள்ளியன்று வெளியிட்டிருந்தது.
இதை முன்வைத்து பிரதமர் அலுவலகம் மற்றும்பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளியன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் அரசுடன் பேரத்தில் ஈடுபட்டது என்ற ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அப்போதைய பாதுகாப்புத் துறை செயலர் எழுதியுள்ளதாக ஒரு கோப்புக் குறிப்பினை செய்தித்தாளொன்று வெளியிட்டுள்ளது. அப்படியென்றால் அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்பதையும் வெளியிடுவதே பத்திரிக்கை தர்மமாகும்.
அந்த குறிப்பிற்கு, "அமைதியாக இருக்கவும். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது" என்று மனோகர் பாரிக்கர் பதிலளித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியா,அப்போது பிரதமர் அலுவலக செயல்பாட்டில் தலையிட்டதை என்னவென்று கூறுவீர்கள்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.