இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார்கள் போராட்டம்: ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு

ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக ராஜஸ்தானில் குஜ்ஜார் இனமக்கள் நடத்திவரும் போராட்டத்தினால், அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார்கள் போராட்டம்: ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு

ஜெய்ப்பூர்: ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து மூன்றாவது நாளாக ராஜஸ்தானில் குஜ்ஜார் இனமக்கள் நடத்திவரும் போராட்டத்தினால், அங்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தற்போது மத்திய அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் தங்களது போராட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி அவர்கள் சனியன்று இரண்டாவது நாளாக மாநிலம் முழுவதும் ரயில் மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் குஜ்ஜார் இனமக்கள் நடத்திவரும் போராட்டத்தினால், அங்கு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அவர்களின் போராட்டம் காரணமாக தொடர்ந்து, சவாய் மாதோபூர்-பயனா பிரிவில் இயக்கப்படும் 10 ரெயில்கள் வேறு வழியாக இயக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என மேற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல போராட்டத்தினால் உண்டாகும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பந்திரா முனையத்தில் இருந்து சவாய் மாதோபூர் வரை 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணியளவில் சிறப்பு ரெயில் இயக்கப்படும். 

இதேபோல மறுமார்க்கத்தில் மதியம் 1.45 மணியளவில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என மேற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com