ஹைதராபாத்: அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திய கத்தியை, வயிற்றிலேயே விட்டு மறந்த மருத்துவர்களால் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானார் ஒரு பெண்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரி. இவரது கணவர் ஹர்ஷாவர்தன் காவல்நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், தனது மனைவிக்கு நிஸாமில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2018 நவம்பர் மாதம் ஹெர்னியா பிரச்னைக்காக அறுவை சிகிச்சை நடந்தது. 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் கடந்த 3 மாதங்களாக அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இது கடந்த வாரம் தீவிரமானது.
மீண்டும் அவரை அதே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், அவரது வயிற்றில் ஒரு கத்திரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக கத்திரியால் வேறு எந்த உடல் பாகத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புகாரினை அடுத்து, மருத்துவமனை ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, மருத்துவ ஆவணங்களை கேட்டுள்ளனர்.