தேசப்பற்று சார்ந்த பதிவுகள் மீது பாகுபாடு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் டிவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
தேசப்பற்று சார்ந்த பதிவுகள் மீது பாகுபாடு பார்க்கப்படுவதாக டிவிட்டர் (சுட்டுரை) மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க சுட்டுரை நிறுவனத்துக்கு பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த 1-ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு சுட்டுரை நிறுவன பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பின்னர், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு வசதியாக, பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க சுட்டுரை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக சுட்டுரையை நிர்வகிக்கும் இந்திய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இவர்களிடன் விவாதிக்க நாடாளுமன்றக் குழு மறுத்துவிட்டது. மேலும், அவர்கள் ஆலோசனை அறைக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டனர்.
இதையடுத்து, சுட்டுரை தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே வரும் 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.