"தோட்டாக்களை விட வாக்குகள் அதிக சக்தியுடையவை' என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், இதுகுறித்து அவர் பேசியதாவது: மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில், சில தன்னார்வலர்கள் முரண்பாடான நிலையை கடைப்பிடிக்கின்றனர். வன்முறை குழுக்களால் மனித உரிமை மீறல்கள் மீறப்படும்போது, தன்னார்வலர்கள் அதை ஆதரிக்கின்றனர் அல்லது மௌனமாக இருக்கின்றனர். அதேநேரத்தில், அந்த சம்பவத்தின்மீது சட்ட அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுக்கையில், அதற்கு தன்னார்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அரசு நிர்வாகத்தில் ஜனநாயக ஆட்சிதான் சிறந்ததாகும். நமது நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளது. நமது நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை நாம் மாற்றுகிறோம். தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு அளிப்பதுதான், ஜனநாயகத்தின் அடிப்படை. வன்முறைக்கு காரணமாக இருப்போர், மனித உரிமைகள் இல்லை என்பார்கள். அவர்கள் முன்வைக்கும் துப்பாக்கிகள் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் யோசனையை பின்பற்ற முடியாது. இத்தகைய நபர்களை ஆதரித்து பேசுவதை சிலர் தற்போது வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றார் வெங்கய்ய நாயுடு.