புதுதில்லி: தில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அர்பித் பேலஸ் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
தில்லி கரோல்பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 28 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடிய தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உடல் கருகி 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தீவிபத்திற்கான காரணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.