முதல் ரஃபேல் போர் விமானம்: இறக்குமதி தேதி அறிவித்தது இந்திய விமானப்படை

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ், பாஜக இடையே கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 
முதல் ரஃபேல் போர் விமானம்: இறக்குமதி தேதி அறிவித்தது இந்திய விமானப்படை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. 

அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

இதனிடையே மத்தியில் ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. 

மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 

இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பாஜக தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வந்தாலும், இரு தரப்புக்கும் இடையே கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், முதல் ரஃபேல் போர் விமானம் வருகிற செப்டம்பர் மாதம் பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு கொணவரப்பட உள்ளது என்று இந்திய விமானப்படை அதிகாரி செவ்வாய்கிழமை தெரிவித்தார். மேலும் ரஃபேல் போர் விமானத்தின் வரவு இந்திய விமானப்படைக்கு பெரும் பலம் சேர்க்கும் என விமானப்படைத் துணைத் தளபதி அனில் கோஸ்லா தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com