சத்தீஸ்கரில் முந்தைய பாஜக அரசால் 5 திட்டங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களை தற்போதைய காங்கிரஸ் அரசு மாற்றியுள்ளது.
சத்தீஸ்கரில் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியிலிருந்தபோது, 5 திட்டங்களுக்கு மறைந்த ஜனசங்கம் தலைவர் பண்டிதர் தீனதயாள் உபாத்யாயாவின் பெயர் வைக்கப்பட்டது.
இதனிடையே, சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில், தீனதயாள் உபாத்யாயாவின் பெயர்கள் சூட்டப்பட்ட 5 திட்டங்களின் பெயர்களையும் சத்தீஸ்கர் அரசு மாற்றியுள்ளது.
இதன்படி, 5 திட்டங்களில் 2 திட்டங்களுக்கு மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பெயரும், 2 திட்டங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரும், ஒரு திட்டத்துக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிக்கையையும் சத்தீஸ்கர் அரசு வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தை சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து உடனடியாக விவாதிக்கக்கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தையும் பாஜக கொண்டு வந்தது. அப்போது மாநில நகர நிர்வாகத்துறை அமைச்சர் சிவ் குமார் தகாரியா பேசுகையில், அரசு திட்டங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மாற்றும் வழக்கத்தை கடந்த 2004ஆம் ஆண்டில் அப்போதைய பாஜக அரசுதான் தொடங்கி வைத்தது என்று குற்றம் சாட்டினார்.