அறிக்கையை அச்சிட்ட தாள் அளவுக்கு கூட அறிக்கைக்கு மதிப்பில்லை என்று ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் போர் விமானங்களில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மத்திய கணக்குத் தணிக்கைக் குழு (சிஏஜி) தணிக்கை செய்தது. இந்த அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அறிக்கை தொடர்பாக ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
"ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் தெரிவித்த மாற்றுக் கருத்துகள் எதையும் இந்த சிஏஜி அறிக்கை குறிப்பிடவில்லை. இந்த அறிக்கையை அச்சிட்ட தாள் அளவுக்கு கூட இந்த சிஏஜி அறிக்கைக்கு மதிப்பில்லை.
புதிய ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிரதமர் வைத்த வாதமே விலை மற்றும் விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்பது தான். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் இவை இரண்டுமே தகர்கப்பட்டுவிட்டது. புதிய ஒப்பந்தம் போடப்பட்டதற்கான காரணம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 30,000 கோடி ரூபாய் கொடுப்பதற்காக தான்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் இல்லை என்று கூறுகிறீர்கள். அப்படி இருக்கையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஏன் உத்தரவிட பயப்படுகிறீர்கள்?" என்றார்.