மோடி, அமித் ஷா எனும் இரண்டு வில்லன்களை கண்டு அனைவருமே பயப்படுகின்றனர்: மம்தா பானர்ஜி
மோடி, அமித் ஷா எனும் இரண்டு வில்லன்களை கண்டு அனைவருமே பயப்படுகின்றனர் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
"தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் இன்று தான் கடைசி நாள். அனைவரும் மோடி, அமித் ஷா எனும் இரண்டு வில்லன்களை கண்டு பயப்படுகின்றனர். ஜனநாயகம், நமோநாயகம் ஆகிவிட்டது. நாட்டின் தற்போதைய சூழல் நெருக்கடி நிலை காலகட்டத்தை காட்டிலும் மோசமாக உள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். நாங்கள் மாநிலத்தில் சண்டையிட்டு கொள்வோம், ஆனால் தேசிய அளவில் அல்ல" என்றார்.
இந்த கூட்டத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.