பிரதமர் மோடி அரசியலமைப்பை கிழித்து, ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறார் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தை காப்போம் என்று ஆம் ஆத்மி சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், "மோடி அரசியலமைப்பை கிழித்து எறிய முயற்சிக்கிறார். அவர் ஜனநாயகத்தை அழிக்கிறார். பிரதமர் என்பதால் நாட்டுக்கு மோடி தான் பொறுப்பு. இந்தியா, பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் குறித்து அவர் உண்மையை பேச வேண்டும்" என்றார்.
இந்த மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.