ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் ராத்னிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு திங்கள்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினர் மீது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.
அவர் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், புல்வாமா மாவட்டத்தின் பேகம்பாக் பகுதியைச் சேர்ந்த ஹிலால் அகமது ராதேர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி நவீத் ஜாத் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, அவர் தப்பி செல்வதற்கு சதி திட்டம் தீட்டியவர்களில் ஹிலால் அகமது மிக முக்கியமானவர். அதுமட்டுமன்றி பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோதல் நடைபெற்ற இடத்தில் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற இந்த மோதலில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் காயமடைந்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.