நிதி சேவை , சினிமா சட்டதிருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நாடெங்கிலும் உள்ள, சர்வதேச நிதி சேவை மையங்களை நிர்வகிக்கும் வகையில் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்கும் வகையிலான மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வங்கிச்சேவை, காப்பீடு, முதலீடு போன்றவற்றை நிர்வகிப்பதற்காக ஆர்பிஐ, செபி, ஐ.ஆர்.டி.ஏ. போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சர்வதேச நிதி சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. திரைப்படங்கள் திருடப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படுவதால், திரைத்துறைக்கும், அரசுக்கும் ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால், அதனை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
திரைப்படங்களை காப்புரிமையாளரின் அனுமதியின்றி பதிவு செய்வது போன்றவற்றை குற்றச்செயல்களாகக் கருதும் வகையில் 1952ம் ஆண்டின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.