மாநிலங்களவை 7-ஆவது நாளாக முடக்கம்!: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரு முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும்
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவையின் மையப்பகுதியில் குவிந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவையின் மையப்பகுதியில் குவிந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.


எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரு முறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் ரஃபேல் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். 
மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், லக்னௌ விமான நிலையத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்க அனுமதிக்குமாறு அக்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பினர். இதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட அமளியால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
அவை மீண்டும் கூடிய போது, மையப் பகுதியில் பகுஜன் சமாஜ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2.35 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக அமளிக்கு இடையே சர்வதேச நிதிச் சேவைகள் மைய ஆணையகம் மசோதா 2019-ஐ மத்திய நிதி இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா அறிமுகம் செய்தார். அதேபோன்று, சினிமாட்டோகிராபி திருத்த மசோதா 2019-ஐ மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிமுகம் செய்தார். 
மக்களவையில்...: மக்களவை காலையில் கூடியதும், கேள்வி நேரத்தில், ரஃபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ரஃபேல் விவகாரம் குறித்து ஏற்கெனவே அவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. தினமும் இடையூறு செய்ய முடியாது. அவையின் விதிகளை மீறும் வகையில் பதாகைகளை ஏந்தி குரல் எழுப்புவது நியாயமில்லை என்றார். இதையடுத்து, அவை காலை 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள்அமளியைத் தொடர்ந்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் பேசுகையில், அவையில் ரஃபேல் விவகாரம் விதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளித்துள்ளது என்றார். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் ஜேபிசியைக் கண்டு பயப்படுகிறார். எங்கள் கோரிக்கைக்கு நீங்கள் செவிசாய்க்காததால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com