நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வர வேண்டும் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார். மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், முலாயம் சிங்கின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் முலாயம் சிங் யாதவ் கூறியதாவது:
எல்லோரையும் அரவணைத்துச் செல்ல முயற்சி எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நல்வாழ்த்துகள். இங்குள்ள அனைவரும் மீண்டும் வெற்றிபெற வேண்டும். பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
அதற்கு இரு கை கூப்பி வணங்கிய பிரதமர் மோடி கூறியதாவது, நாங்கள் சிறப்பாக ஆட்சியை துவக்கினாலும், அனைத்தையும் சாதிக்க முடியவில்லை. இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. அதற்கு முலாயம் சிங்கின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நல்வாழ்த்துகளுக்காக முலாயம் சிங்குக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.