நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அவரது சகோதரர் பிரகலாத் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மங்களூருவுக்கு வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுதான், வரும் தேர்தலிலும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார்.
மத்திய பாஜக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இது பாஜகவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும். காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா சேர்ந்திருப்பதால், தேர்தல்களில் அக்கட்சிக்கு எந்த சாதகமும் இருக்காது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, கடந்த கால தேர்தல்களை போல வரும் தேர்தலிலும் தோல்வியையே சந்திக்கும் என்றார் பிரகலாத் மோடி.