புது தில்லி: ரஃபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக பொய் கூறியவர்களை ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது? என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய விமானப்படைக்குத் தேவையான ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ட்சால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தையும், பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்த அறிக்கையை மாநிலங்களவையில் மத்திய கணக்குத் தணிக்கை குழு (சி.ஏ.ஜி) தாக்கல் செய்தது.
141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் போர் விமானங்கள் விலை எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் பறக்கும் நிலையில் உள்ள விமானத்தின் விலை 2007-ல் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு சமமானதுதான். ஒட்டுமொத்த ரபேல் ஒப்பந்தம், காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட 2.86 சதவீதம் மலிவானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தில் தொடர்ச்சியாக பொய் கூறியவர்களை ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்கப் போகிறது? என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கையின் மூலம் எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு தண்டிக்க போகிறது?
2007 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த ரஃபேல் ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, 2016 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் குறைந்த விலை, விரைவான விநியோகம் மற்றும் சிறந்த பராமரிப்பு போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.