ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
ஜெய்சால்மர் மாவட்டத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 விமானம் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானம், இடா கிராமத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருக்கும் பாராசூட் மூலம் விமானி உயிர் தப்பினார்.
இதுகுறித்து விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, தில்லியில் விமானப்படை துணை தளபதி அனில் கோஷ்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், விமானம் விபத்தில் சிக்கும்போது விமானி உயிர் தப்பிப்பதற்கே, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார்.
மிக்-27 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வான்பகுதியில் பறவை பறந்திருக்கலாம் என்றும், இதனால் விபத்து நேரிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.