அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் சக்úஸனாவை வரும் 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமலாக்கத் துறை காவல் அவருக்கு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. எனவே, அன்றைய தினம் அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரிடம் நீதிபதி தனியறையில் விசாரணை நடத்தினார். அப்போது, ராஜீவ் சக்úஸனாவின் வழக்குரைஞர்கள் உடனில்லை. ராஜீவ் சக்úஸனாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்து அதன் அறிக்கையை புதன்கிழமை 2 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.
மேலும், அவரை 18ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சக்úஸனாவின் பெயர் பிரதானமாக சேர்க்கப்பட்டுள்ளது.
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஃபின்மெக்கானிக்கா ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்கள், இந்திய விமானப் படை முன்னாள் தலைவர் எஸ்.பி.தியாகி, ராஜீவ் சக்úஸனாவின் மனைவி ஷிவானி ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.