2022ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமாக வீடுகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொடர்பான மாநாட்டில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில், ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பண புழக்கம் முடிவுகட்டப்பட்டது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், முதலில் பிரச்னைகள் ஏற்பட்டது. இருப்பினும், பிற்காலத்தில் நல்ல விளைவுகள் ஏற்பட்டன.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், வீடுகள் வாங்குவோருக்கும், வாடகைதாரருக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து அரசு விலக்களித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால், வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு பெறுவோர், வீட்டு வசதி துறையை நாடுவர். இதனால் வீட்டு வசதி துறை பெரிதும் பயனடையும். இதுமட்டுமன்றி, வீட்டு வாடகை செலுத்துவோருக்கு வருமான வரியில் அளிக்கப்பட்ட சலுகை ரூ.2.4 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு குடும்பம் 2 வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் மோடி.