காஷ்மீர் வெடிகுண்டு சம்பவம் அரங்கேறியுள்ளதால் அரசியல் குறித்து பேச இது உகந்த நேரம் அல்ல என்று பிரியங்கா காந்தி செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று லக்னௌவில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிருந்தார். இதனிடையே காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
எனவே, பிரியங்கா காந்தி தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
"இந்த நிகழ்வு அரசியல் குறித்து பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதனால், தற்போது அரசியல் குறித்து பேசுவது உகந்ததாக இருக்காது. வீரமரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த அனைவரையும் வலியுறுத்துகிறேன். இந்த நிகழ்வு வருத்தமளிக்கிறது. இந்த நேரத்தில் ஒட்டுமொத்த நாடே உங்களுடன் இருக்கிறோம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.