அமெரிக்காவில் பல கோடி டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்திய அமெரிக்கர்கள் மூவர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க நீதித் துறையின் குற்றப் பிரிவு உதவி அட்டர்னி ஜெனரல் பிரையன் பென்ஸ்கோவ்ஸ்கி கூறியதாவது:
நிதி மோசடி வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர்கள் ரவீந்தர் ரெட்டி குடிபட்டி (61), ஹர்ஷ் ஜக்கி (54), நீரு ஜக்கி (51) ஆகிய மூவரும் டெக்ஸாஸ் மாகாணத்தின் லாரெடோ நகரைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களுடன், மெக்ஸிகோவைச் சேர்ந்த அட்ரியான் அர்சினிகா ஹெர்ணான்டஸ் (36), டெக்ஸாஸைச் சேர்ந்த அட்ரியானா அலெக்ஸாண்ட்ரா கால்வான் கான்ஸ்டன்டினி (36), லுயிஸ் மொன்டெஸ் பாடினோ (57) ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 6 பேரும், போதைப் பொருள் விற்றதிலிருந்து கிடைத்த பணத்தை, லாரெடோவில் தொழிலில் பயன்படுத்தி அதன் மூலம் அந்தப் பணத்தை மெக்ஸிகோவில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு வழங்கி மோசடி செய்துள்ளனர். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின்படி, அந்தப் பணத்தை டெக்ஸாஸில் உள்ள லாரெடோ நகருக்கு கொண்டு செல்ல இவர்கள் 6 பேருமே உதவியுள்ளனர்.
பல கோடிகள் மதிப்புடைய அந்த அமெரிக்க டாலர்களை பல்வேறு விதங்களில் பொட்டலங்களாக கட்டி கார்கள், பேருந்துகள், சரக்கு விமானங்கள், ஒரு தனி விமானம் ஆகியவற்றைக் கொண்டு லாரெடோ நகருக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு ரவீந்தர் ரெட்டி, ஹர்ஷ், நீரு ஆகியோருக்குச் சொந்தமான வாசனை திரவிய கடைகள் உள்ளிட்டவற்றின் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளன என்று உதவி அட்டர்னி ஜெனரல் பிரையன் பென்ஸ்கோவ்ஸ்கி கூறினார்.