ஸ்ரீநகர்: புல்வாமாவின் அவந்திபோரா அருகே பாதுகாப்புப் படை வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது, வெடிச் சத்தம் சுமார் 10 கி.மீ. தொலைவுக்குக் கேட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு வாகனம் மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் மோதியதில், காரில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறின. பாதுகாப்பு வாகனம் உருகுலைந்து போனதில், அதில் இருந்தவர்களின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.
புல்வாமா மாவட்டத்தை ஒட்டியுள்ள ஸ்ரீநகரின் சில பகுதிகளில் கூட வெடிச்சத்தம் உணரப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக அதிக சக்திவாய்ந்த வெடிபொருள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பேருந்து மீது மோதி, தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட வாகனம் எந்த வகையானது என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அது சிதறி சின்னாபின்னமாகியுள்ளது.
மேலும், தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்பாகங்கள் சிதறியிருப்பதால், உடல்களை அடையாளம் காண்பதற்கு தாமதம் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர். வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வீர மரணம் அடைந்த பல வீரர்கள், விடுமுறை முடிந்து எல்லைப் பாதுகாப்புப் பணிக்குத் திரும்பும் போது இந்த தாக்குதலில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தான். இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.
இந்தக் கொடிய தாக்குதலில் 43 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2001ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்றதொரு கார் தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை.