புது தில்லி: புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் மிகப்பெரிய பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். இந்திய மக்களின் ரத்தம் கொதிக்கிறது. பயங்கரவாதத்தை வேறருக்க பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது என்று மோடி கூறினார்.
மேலும், பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடாது. புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான எதிரிகளுக்கு தக்க பதிலடித் தரப்படும். பாகிஸ்தான் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
பயங்கரவாதத் தாக்குதலை கட்சிகள் அரசியலாக்கக் கூடாது. வேற்றுமைகளை மறந்து எதிரிகளை அழிக்க வேண்டும். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசுடன் ஒன்றிணைய வேண்டும். தாக்குதலுக்கு பயந்து இந்தியா அச்சத்தில் உறைந்து விடாது. வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.
அதோடு, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதகாவும், பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாவும் மோடி கூறினார்.