பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலமாக, அஷ்டசித்தி விநாயகர், ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) மார்ச் 26 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய ரயில்வேயும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை 2005 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த சிறப்பு ரயில் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், அஷ்டசித்தி விநாயகர், ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க சுற்றுலா ரயில் மூலமாக பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறியது: பாரத தரிசன சுற்றுலா ரயிலில் முதன்முறையாக அஷ்டசித்தி விநாயகர் ஆலயங்கள், ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க மார்ச் 26 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயிலானது மதுரையிலிருந்து புறப்பட்டு, ஷீரடி மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ் பெற்ற அஷ்டவிநாயகர் கோயில்களான ஸ்ரீமேரிஸ்வரர் கணேஷ், ஸ்ரீ சித்தி விநாயகர் கணேஷ், ஸ்ரீ சிந்தாமணி கணேஷ், ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ விக்னேஸ்வரா, கிரிஜாட்மாஜ் விநாயகா, ஸ்ரீ வரத் விநாயகா, ஸ்ரீ பாலேஸ்வர் விநாயகா ஆகிய கோயில்களுக்கு சென்று விநாயகரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாள்கள் பயணத்தை கொண்ட இதற்கான கட்டணம் ரூ.5,885.
இதுதவிர, மஹா சிவராத்திரி நவஜோதிலிங்க யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரை வரும் 28-ஆம் தேதி புறப்படுகிறது. ஆந்திரத்தில் ஸ்ரீசைலம், மகாராஷ்டிரத்தில் பார்லி வைத்யநாத், அவுங்நாக்நாத், குருஷ்னேஷ்வர், பீம்சங்கர், திரையம்பகேஷ்வர், குஜராத்தில் சோம்நாத், மத்தியப்பிரதேசத்தில் மஹாகாலேஸ்வர் மற்றும் ஓம்காரேஷ்வர் ஆகிய நவஜோதிர்லிங்கங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாள்கள் பயணத்தை கொண்ட இதற்கான கட்டணம் ரூ.14,375.
இதுதவிர, கோவா சிறப்பு சுற்றுலா, கர்நாடக ஆலயங்கள் தரிசிக்கும் சுற்றுலா ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை 90031 40680, 90031 40681 என்ற செல்லிப்பேசி எண்களிலும், www.irctctourism.com
என்ற இணையதளம் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.