உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்த 72 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கள்ளச்சாராயம், மாநில எல்லையைக் கடந்து உத்தரகண்ட் மாநிலத்துக்கும் விற்பனைக்கு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சாராயத்தைக் குடித்ததில் உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் 36 பேரும், உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்தில் 36 பேரும் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு கண்பார்வை பறிபோனது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த இரு மாநிலங்களில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அண்மைக் காலங்களில் கள்ளச்சாராயம் குடித்து அதிகமானோர் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் ஹரித்துவாரைச் சேர்ந்த பிரமோத் ஷர்மா என்பவர் இது தொடர்பாக உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அண்டை மாநிலத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட கள்ளச்சாரயம் உத்தரகண்டில் விற்பனை செய்யப்பட்டதில் 36 பேர் உயிரிழந்துவிட்டனர். அதிகாரிகள் பணியில் கவனமாக இல்லாததும், மெத்தனப்போக்கும் மட்டும் இதற்கு காரணமாகத் தெரியவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு கள்ளச்சாராயத்தை அனுமதித்திருப்பதாகவும் சந்தேகம் எழுகிறது. எனவே, நமது மாநிலத்தில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில் தவறு செய்த அதிகாரிகளைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக, இதற்கு பொறுப்பான மாவட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன், நீதிபதி ரமேஷ் சந்திர குலாபி ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக மாநில அரசு 10 நாள்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.