ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் உயிரிழந்த வீரர்களின் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து, பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.
இந்தக் கொடிய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ஒரு வீரர் பலியானார். இதையடுத்து உயிரிழந்த வீரர்களின் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் ஏ முகமது பொறுப்பேற்றுள்ளதன் மூலமாக, இது எல்லை தாண்டி தூண்டப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பயங்கரவாத தாக்குதலில் வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டது குறித்து அவசர முடிவுகள் எடுப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, பியூஷ் கோயல், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.