ஜம்மு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களைக் காணும் போது பெரும் வலி உண்டாகிறது என்று தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஒருவர் மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர்.
வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அந்த அமைப்பின் சார்பில் தாக்குதலில் ஈடுபட்டது அம்மாநிலத்தைச் சேர்ந்த அடில் அகமது தார் என்ற இளைஞன் என்பது அவன் மரணத்திற்கு முன்பாக வெளியிட்ட விடியோ மூலம் தெரிய வந்தது.
அவன் ஏற்கனவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல்வேறு கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவன் என்பதும், அதற்காக அவன் மீது வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரிய வந்தது.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களைக் காணும் போது பெரும் வலி உண்டாகிறது என்று தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை தெரிவித்துள்ளார்.
தீவிரவாதி அடில் அகமது தாரின் தந்தை குலாம் ஹசன் தார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:
கடந்த வருடம் ஜம்மு காஷ்மீர் பள்ளி வாரியத் தேர்வுகள் நடந்த பொழுது அவன் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டான். ஆனால் அவன் தற்கொலை தீவிரவாதி ஆவான் என நான் கற்பனை செய்தது கூட இல்லை.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை காணும் பொழுது எனக்கு பெரும் வலி ஏற்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினரின் வலியை நான் உணர்ந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.