விஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கு: கிறிஸ்டியன் மிஷெலின் ஜாமீன் மனு தள்ளுபடி

விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது
விஐபி ஹெலிகாப்டர் பேர வழக்கு: கிறிஸ்டியன் மிஷெலின் ஜாமீன் மனு தள்ளுபடி

விஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.
 பிரிட்டனை சேர்ந்த அவர், துபையில் இருந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து மிஷெலை அமலாக்கத் துறை கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தது. அமலாக்கத் துறை காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தில்லி நீதிமன்றத்தில் மிஷெல் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி மிஷெல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மிஷெலுக்கு ஜாமீன் கொடுக்க அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியன கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மிஷெலின் வழக்குரைஞர்கள், அவரை தொடர்ந்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது நியாயமில்லை என்று வாதிட்டனர்.
 இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், மிஷெல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் ரூ.400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது.
 இந்த விவகாரம் தொடர்பாக மிஷெல் உள்ளிட்ட 3 இடைத்தரகர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com