ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம், வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை திங்கள்கிழமை (பிப்ரவரி 18) அளிக்கவுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஸ்டெர்லைட் ஆலையின் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன் மற்றும் கே.எஸ். விஸ்வநாதன், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர்.
இந்த வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்புடைய எழுத்துப்பூர்வ வாதங்களை பிப்ரவரி 11-ஆம் தேதி காலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதனிடையே, இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழக அரசு பிப்ரவரி 11-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.