"அமைப்புசாரா தொழிலாளர்கள் ஓய்வூதியத்துக்கு பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்'

மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நாடெங்கிலும் உள்ள

மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறும் வகையிலான பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நாடெங்கிலும் உள்ள 3.13 லட்சம் பொது சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 மத்திய மின்ணணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 48 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள் ஆவர். அவர்கள் மாதந்தோறும் ஒரு பங்களிப்புத் தொகையை அளித்து வருவதன் மூலமாக, 60 வயதுக்குப் பிறகு ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 மொத்தமுள்ள 3.13 லட்சம் பொது சேவை மையங்களில் 2.13 லட்சம் மையங்கள் கிராமப்புற பஞ்சாயத்துகளில் இயங்குகின்றன. ஒவ்வொரு திட்டத்தையும், அதற்குத் தகுதியான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மையங்கள்தான் பெரும் உதவிகரமாக உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களிலும், வளரும் நகர்ப்புறங்களிலும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் பொது சேவை மையங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
 ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டும். பொது சேவை மையங்கள் வங்கிச் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திட்டத்தில் இணைபவர்கள், வங்கிக் கிளைகளுக்கு செல்லாமலேயே, பொது சேவை மையங்களில் நேரடியாக வங்கிக் கணக்குகளையும் தொடங்க முடியும்.
 அதே சமயம், இனி வரும் காலத்தில், பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பிரத்யேக இணையதளத்திலும், அது சார்ந்த செல்லிடப்பேசி செயலியிலும், பயனாளர்கள் நேரடியாக தங்களை இணைத்துக் கொள்ளும்படியான வசதிகள் மேம்படுத்தப்படும். ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அதில் தெரிவித்து ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றார் அந்த அதிகாரி.
 மாதந்தோறும் ரூ.15,000-க்கும் குறைவான ஊதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது.
 அதன்படி, இத்திட்டத்தில் இணையும் 18 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர் மாதந்தோறும் ரூ.55 செலுத்த வேண்டும். 29 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும். 40 வயது தொழிலாளர்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பங்களிப்பை அளிக்கும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com