மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜபிஎல் தலைவருமான ராஜீவ் சுக்லா திங்கள்கிழமை திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு அனுமதி அளிக்கும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என்னும் முடிவில் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக உள்ளது. விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பது தான் எனது விருப்பமும். ஆனால், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாட்டுடன் விளையாடுவது அந்த விளையாட்டையே பாதிக்கும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை தான் கடந்த காங்கிரஸ் அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு உள்ளதை பல ஆவணங்கள் மூலம் நிரூபித்துள்ளது. இதை அவர்கள் உணர வேண்டும் என்றார்.
இதனிடையே 2019 உலகக் கோப்பையில் இந்திய, பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, உலகக் கோப்பை நடைபெற இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனவே அதுகுறித்து தற்போது கூற இயலாது. முதலில் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தட்டும் என்று பதிலளித்தார்.