புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படைவீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்களை குறிவைத்து அண்மையில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்தியத் தாக்குதலில் 40 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்முவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் காஷ்மீர் மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதாகவும், காஷ்மீர் மாணவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதைக் கண்டித்து, காஷ்மீரில் காஷ்மீர் பொருளாதார கூட்டணி, காஷ்மீர் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக காஷ்மீரில் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. தனியார் நிறுவன கால் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
லால் சௌக்கில் உள்ள முக்கிய காய்கறி சந்தை உள்ளிட்ட சந்தைகளும் மூடப்பட்டிருந்தன. வியாபாரிகள் வராததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.
ஜம்முவில் 3ஆவது நாளாக ஊரடங்கு: இதனிடையே, ஜம்மு பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கருத்தில் கொண்டு ஜம்முவில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு, 3ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.
ஜம்மு பிராந்தியத்தில் பதற்றம் நிறைந்த இடங்களில் ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமையும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.