சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நிதி மோசடியில் ஈடுபட்ட சாரதா குழும நிறுவனங்களிடம் இருந்து அவர், ரூ.1.4 கோடியைப் பெற்றுள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மாதங்க் சிங்கின் முன்னாள் மனைவி மனோரஞ்சனா சிங் மூலமாக, சாரதா குழுமத்தின் உரிமையாளர் சுதீப்தா சென்னுக்கு நளினி சிதம்பரம் அறிமுகமானார்.
நளினி சிதம்பரமும், சுதீப்தா சென் உள்ளிட்டோரும் சேர்ந்து சாரதா குழுமத்தின் நிதியை வேறு வழிகளில் பயன்படுத்தியது, வேண்டுமென்றே ஏமாற்றியது போன்ற சதிச் செயல்களில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆலோசனை வழங்கியதற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாரதா குழும நிறுவனத்திடம் இருந்து ரூ.1.4 கோடியை நளினி சிதம்பரம் பெற்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நளினி சிதம்பரத்துக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி, அவரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் மீதான வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை 6 வாரங்களுக்கு பிறகு நடைபெறும் எனவும் தெரிவித்தது.