இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ஜென்டினா அதிபர் மௌரிஷியோ மேக்ரி ஆகியோர் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தனர். ஆர்ஜென்டினா அதிபர் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இருநாட்டு நல்லுறவு தொடர்பாக நடைபெற்ற இந்த சந்திப்பில் சூரிய சக்தி ஒப்பந்தம் உட்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உலகின் அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நானும், ஆர்ஜென்டினா அதிபரும் முடிவு செய்துள்ளோம். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக பேச்சுவார்த்தையின் மூலம் இனியும் தீர்வு காண்பது காலம் கடந்த செயல் என்பதை புல்வாமா பயங்கரவாத சம்பவம் வெளிப்படுத்திவிட்டது.
பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் உடனடியாக ஒன்றிணைந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே தற்போதைய தேவை. பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது கூட அதை வளர்ப்பதற்கு சமமாகும். ஜி20 நாடுகளில் இடம்பெற்றுள்ளவர்கள் என்ற அடிப்படையில் இதுதொடர்பான 11 அம்ச திட்டம் முன்வைக்கப்படும்.
இந்தியாவும், ஆர்ஜென்டினாவும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை அமல்படுத்த இன்று தீர்மானம் எடுத்துள்ளன. 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற வேண்டும் என ஆர்ஜென்டினா அதிபர் ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து ஆர்ஜென்டினா அதிபர் மௌரிஷியோ மேக்ரி பேசுகையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மனிதநேயத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து போராடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம் என்றார்.