புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக "வாட்ஸ் அப்' குழுவில் கருத்து பதிவிட்ட சத்தீஸ்கரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஃபரீத்நகரைச் சேர்ந்த கைஃப் (18) என்ற நபருக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரது வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் கூறியதாவது:
நாங்கள் நடத்தி வரும் "வாட்ஸ் அப்' குழுவில் கைஃப் இடம் பெற்றுள்ளார். புல்வாமா தாக்குதலில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைக் கண்டித்தும் பதிவிட்டிருந்தோம்.
அப்போது இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கைஃப், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என பதிவிட்டார். இது தேச விரோத செயல் என்று குழுவில் இருந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அந்தக் குழுவில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த பதிவுகள் "ஸ்கிரீன் ஷாட்' எடுக்கப்பட்டு பிற வாட்ஸ் அப் குழுக்களில் மட்டுமின்றி பல்வேறு சமூகவலைதளங்களிலும் பரவியது என்றனர்.
கைஃப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்டது வேகமாக பரவியதை அடுத்து, உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கைஃபை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.